நைஜர் வன சரணாலயத்தில் 8பேர் சுட்டுக் கொலை

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமேயின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒட்டகச் சிவிங்கிகளுக்கான சரணாலயத்தில் நேற்று முன்தினம் (08) எட்டுப் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி சரணாலயத்தில் இயற்கை சூழலில் வசிக்கும் ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் வருவது வழக்கம். இந்த சரணாலயத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த இரு சுற்றுலா வழிகாட்டிகளை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்திற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் நைஜீரிய அதிபர் மகமடூ இஸ்ஸபவ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாக்குதலிற்கான காரணங்கள் குறித்து, விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொண்டார்.

இங்கு ஐ.எஸ். மற்றும் அல் குவைதா அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் சார்பில் 5,100 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முடிவெடுத்துள்ளனர்.