மூணாறு நிலச்சரிவில் இதுவரை 49 பேரின் உடல்கள் மீட்பு 

கேரளா மூணாறு அருகே கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றது.

தெற்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள மூணாறு கிராமத்தில் 28 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ராஜமலை செல்லும் பகுதியில் அமைந்துள்ள கன்னன் தேவன் தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைத்து தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

பெய்த கனமழை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் நிலச்சரிவில் சிக்கி அங்கு வசித்தவர்கள் 85 பேர் வரையில் மண்ணில் புதைந்தனர். இதனையடுத்து, மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், பொலிசார் போன்றோர் ஈடுபட்டு நிலத்தில் புதைந்தவர்களை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். நேற்று வரை 43 உடல்கள் மீட்கப்பட்டன. இன்றைய தேடுதலின் போது 6 உடல்களை மீட்டனர். இன்றுடன் 49 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன.