5 நாட்கள் காணாமல் போன தொழிநுட்ப உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கடந்த 5 நாட்களாக காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் இன்றையதினம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே சடலம் மீதான சந்தேகம், மற்றும் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது தொடர்பில் தெரிவிக்க முடியும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.