பகிடிவதையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை ; அளுநர் உறுதி

யாழ். பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

எனக்குக் கிடைத்த அறிக்கையின்படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்தப் பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை எடுத்துள்ளது. பல்கலைக்கழக
நிர்வாகத்தினரை நான் சந்திக்க இருக்கின்றேன்.

அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராகச் சரியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம். வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை
உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும்.

சீரழிந்து செல்லும் இந்தச் சமூகத்தை மீளக் கட்டியயழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தப் பகிடிவதை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது உரியநடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானது.அத்தோடு ஊடகங்களும்
சமூக அமைப்புக்களும் உரிய நேரத்தில் விடயங்களைச் சுட்டிக்காட்டும் போது, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.