பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இலங்கையை பிரதிபலித்து வடக்கு மாகாணம் வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (18) மற்றும் எஸ்.சிறிதர்சன் (18) ஆகிய வீரர்கள் குத்துச்சண்டையின் போது காயமடைந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவிலிருந்து ஏழு வீரர்கள் தேசிய கிக் பொக்சிங் குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பாகிஸ்தானில் கடந்த 23-01-2020 தொடக்கம் 27-01-2020 வரை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றியிருந்த நிலையில் போட்டியின் போது குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் கை மற்றும் முகத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இருந்தபோதும் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து விளையாடி இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
காயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சையின் பின் நாளை
27-01-2020 மாலை நாடு திரும்பவுள்ளனர்.
வடக்கு மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் பயிற்சிகளை பெற்று தேசிய ரீதியில் தங்கப்பதக்கங்களை பெற்ற ஏழு வீரர்கள் குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கை பிரன்ஞ்சு சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் சி.பூ.விக்கிரமசிங்க தலைமையில் பாக்கிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் 11 தங்கப்பதக்கங்களையும் 8 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.