சீனாவிலிருக்கும் 150 மாணவர்கள்48 மணி நேரத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்

கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஹான் மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும்
உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்காக ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் சிறிலங்கன் விமான சேவை இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.

வுஹான் மாநிலத்தில் இருந்து வெளியேறுவதற்கும்  மற்றும் உள்நுழைவதற்கும் தற்போதைய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கி உடனடியாக அங்கிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அனைத்து சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிச்சுவான் மாநிலத்தில் வசிக்கும் சுமார் 150 இலங்கை மாணவர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.