கச்சத்தீவு விவகாரம் தமிழக சட்டமன்றில் பரபரப்பு

தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் என்.ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதம அமைப்பாளர் வ.வேலு, கச்சத்தீவு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கச்சத்தீவு தொடர்பான அன்றைய மத்திய அரசின் முடிவின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னரே கச்சத்தீவு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி, கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொறுப்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதன்போது, கச்சத்தீவு விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அமைச்சர் ராஜ்மோகன் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான இந்த விவாதத்தின்போது ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியதாகதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.