இலங்கையின் கடற்பரப்பில் மீன்வளம் 2014 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருவதாக நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இது இலங்கை மட்டுமன்றி உலகின் பல நாடுகளின் கடல்சார்அமைப்புகளையும் பாதிக்கும் ஒரு பொதுவான அச்சுறுத்தல் என நாரா அமைப்பின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலை திடீரென உருவானதொன்றல்ல என்றும், மீன்வளம் வீழ்ச்சிக்கு இதுவரை குறிப்பிட்ட ஒற்றைக் காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், உயிரியல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணியாகக் கருதப்படுவதாகக் கூறினார்.
தற்போது நிலவும் எல்நினோ நிலைமை இந்த நிலையைப் பாதிக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இலங்கை இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை நீண்டகாலத்துக்குத் தொடர்ந்தால், கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அவர்களை மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கி வழிநடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான தீர்வாக மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விசேட திட்டம் தொடங்கப்பட்டுள்ள போதிலும், அதன் தற்போதைய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என பேராசிரியர் சனத் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.



