வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியார் தொடர்பில் நீதி கோரி பேரணி

3 8 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியார் தொடர்பில் நீதி கோரி பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி, அல்லைப்பிட்டியில் இன்று (20) வியாழக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையான ஜிம் பிறவுண் அடிகளார் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரி தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த காலப்பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனது உதவியாளரான வின்சன் விமலதாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, அல்லைப்பிட்டி கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.

கடந்த 20 வருடங்களாக அவர்கள் இருவர்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இருவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, இன்றைய தினம் வியாழக்கிழமையுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி அல்லைப்பிட்டி சந்தியில் இருந்து பிலிப் நேரியார் தேவாலயம் வரையில் பேரணியாக சென்று, தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி இடம்பெற்றது.