ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்!

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும் தமது சுயாதீனத்துவத்தையும் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பேணிக்கொண்டு, பொது இணக்கப்பாடு எட்டப்படும் விடயங்களில் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்தன.

அதன் நீட்சியாக, தமிழ்பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரமொன்றை வழங்குமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்படி 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், மலையக தமிழ் மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றல், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியலமைப்பின் உறுப்புரை 16(ஏ) மற்றும் அரசகரும மொழிகள் கொள்கையுடன் தொடர்புடைய சகல அரசியலமைப்பு விதிகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அவர்களது அக்கறைக்குரிய விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.