திருகோணமலையில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு முதல் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள், இன்று (13)உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“180 சுகாதாரப் பணியாளர்கள், கொடுப்பனவுகள் எதுவும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றோம்.

எமக்கு நிரந்தர நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று நாம் தொண்டர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது கூறப்பட்டது. இதனை நம்பி 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணியாற்றுகின்றோம்.

பிரதேச மருத்துவ மாதுக்களுடன் இணைந்து கர்ப்பிணித் தாய்மாருக்கான அனைத்து சேவைகளையும் கிராமங்களுக்கு கால்நடையாக சென்று வழங்கி வருகின்றோம்.

எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. தேவைகள் உள்ளன. ஆனால், வருமானம் இல்லை. ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. நிரந்தர நியமனம் கிடைக்கும் என்று. அதுவும் தற்போது எமக்கு கிடைக்காது போல் உள்ளது. எனவே எமக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதேவேளை இதைப் பற்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்காவிடம்  கேட்கப்பட்டபோது அவர் கூறுகையில்,

“தற்போது சுகாதாரப் பணியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை மத்திய சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்த நியமனத்தை வழங்குவது மத்திய அரசாங்கமே. மாகாண சபைக்கு இந்த நியமனத்தை வழங்கும் அதிகாரம் இல்லை. எனவே நடந்து முடிந்த நேர்முகப்பரீட்சை மற்றும் வழங்கப்படவுள்ள நியமனம் என்பவை குறித்து எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று கூறினார்.

இதேவேளை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் 4 பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு சென்று, தமது கோரிக்கை அடங்கிய மனுவை செயலாளரிடம் வழங்கினர்.