இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசுக்கு இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் வழக்கமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோகபூர்வ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இலங்கை தரப்பில் வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவும், உஸ்பெகிஸ்தான் தரப்பில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அலோயேவ் பக்ரோமும் தலைமை தாங்கினர். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் உஸ்பெகிஸ்தானின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அருணி ரணராஜா, மத்திய ஆசிய பிராந்தியத்துடன் உறவுகளை விரிவுபடுத்த இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
இப்பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தரப்பும் கவனம் செலுத்தின. குறிப்பாக, இலங்கையிலிருந்து உஸ்பெகிஸ்தானுக்கு பருவகால நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இரு நாடுகளும் வரவேற்றன.
மேலும், ஆடை உற்பத்தி, தேயிலை பொதியிடல், கடல் உணவு ஏற்றுமதி மற்றும் ரத்தினக் கற்கள் தொழில்துறைகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட அரசியல் ஆலோசனைக் கூட்டம் 2027 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்படவுள்ளது.



