யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை: கடற்றொழில் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பௌத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பர மேகன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

லண்டனில் வாழும் தமிழ் அன்பர் ஒருவர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வைப்பதற்காக இந்த நடராஜர் சிலையை அனுப்பி வைத்திருந்ததாக கலாநிதி சிதம்பர மேகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிலையை விமான நிலைய வளாகத்தில் நிறுவுவதற்கான முயற்சிகளைத் தாம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் உள்ளூர் விகாராதிபதி ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்குக் கலாசார அமைச்சர் பச்சைக்கொடி காட்டியிருந்த நிலையிலும், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மத முரண்பாடுகள் தோன்றிவிடும் எனக் கூறி இந்த சிலையை வைக்க விடாமல் தடுத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

அமைச்சரின் இந்த முட்டுக்கட்டை மற்றும் எதிர்ப்புத் காரணமாக, லண்டனில் இருந்து விமான நிலையத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, தற்போது யாழ்ப்பாணம் நாக விகாரைக்குள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விவகாரம் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதிக்கும் ஒன்றாக மாறுவதற்கு முன்பதாக, சம்பந்தப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.