சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 695 மில்லியன் டொலர் நிதியுதவி!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை அடுத்தே இந்த இரு தவணைகளுக்கான நிதியும் ஒரே கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தகவல்களின்படி, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த பெருந்தொகை நிதியானது நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த கால பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையையும், சந்தை நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த நிதியுதவி ஒரு குறிப்பிடத்தக்க பக்கபலமாக அமையும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.