யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல் குறித்து தீவிர விசாரணை – நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்த வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மாணவர்களே இந்த வெசாக் கூட்டை மிகவும் அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர்.
எனவே, இந்த நல்லிணக்க முயற்சியைச் சீர்குலைப்பதற்காக ஏதேனும் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலா இது என்பது குறித்துப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேலதிக விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியும் என்றார்.