பொன்சேகாவின் முட்டாள்த்தனம் ‘நந்திக்கடல் இரகசியங்கள் மறைக்கப்பட்டாலும் தியாகத்தின் சாட்சியங்கள் மரணிக்காது’ : விதுரன்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் பின்னணியில், ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வர முயன்று கொண் டிருந்த இலங்கை, மீண்டுமொரு பாரிய இடருக்குள் தள்ளப் பட்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின் னர், உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச ரீதியாகத் தோன்றி வரும் வெளியக அதிர்ச்சிகள் (External Shocks) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
அண்மையில் பாராளுமன்ற நிதிக் குழுவின் முன்பாக முன்னிலையாகி இருந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் எச்சரிக்கை அறிக்கை, இலங்கை மீண்டுமொரு அபாயகரமான சூழலை நோக்கி நகர்கிறதோ என்ற நியாயமான அச்சத்தை மக்கள் மத்தியிலும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலும் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய சூழல், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியின் கோர நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன், புதிய அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கையாளுகைத் திறனை உரைத்துப் பார்க்கும் களமாகவும் மாறியிருக்கிறது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரப்புக்கள் மற்றும் மத்திய வங்கியின் தரவுகளை உற்றுநோக்கும் போது, இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சடுதியான வீழ்ச்சி மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்ற போது 289 ரூபாவாகக் காணப்பட்ட அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு, அண்மையில் 354 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்தது.
வெறும் இரு ஆண்டுகளுக்குள் டொலரின் மதிப்பு 65 ரூபாவுக்கும் அதிகமாக உயர்வடைந்திருப்பது சாதாரண மான ஒரு சந்தை மாற்றமல்ல. கடந்த காலங்களில் சதக் கணக்கில் அல்லது மிக மெதுவாகக் குறைந்து வந்த ரூபாவின் பெறுமதி, தற்போது ஒரே நாளில் 10 முதல் 12 ரூபா வரை சரிவடையும் அளவுக்கு ‘ரொக்கட் வேகத்தில்’ வீழ்ச்சி கண்டுள்ளது. இது இப்போது கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் நிச்சமயமற்ற நிலைமையே நீடிக்கிறது.
குறிப்பாக, 2028 ஆம் ஆண்டில் இலங்கை 3.259பில்லி யன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டுள்ள சூழலில், டொலரின் மதிப்பு இவ்வாறு கட்டுப்பாடின்றி அதிகரிப்பதும், அதற்கேற்ப அதன் கையிருப்பு கரைந்து வருவதும் ஆபத்தான எச்சரிக்கை மணி என்பதில் ஐயமில்லை.
மத்திய வங்கியின் விளக்கங்களின்படி, அமெரிக்க டொலரின் உலகளாவிய பலம் மற்றும் அண்மைய நாட்களில் நிலவிய சந்தை ஊகங்கள் (Market Speculations) காரணமாக உருவான செயற்கையான ‘மிகைக் கேள்வி’ (Excess Demand) இந்த சடுதியான வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
பதற்றமடைந்த இறக்குமதியாளர்கள் தமக்குத் தேவையான டொலர்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால் சில்லறைச் சந்தையில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டது. எனினும், மத்திய வங்கியின் தலையீடு மற்றும் ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தி 8.75 சதவீதமாக அதிகரித்தமை போன்ற இறுக்கமான நிதிக்கொள்கை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தளம்பல் நிலை தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், 700 பில்லியன் டொலர் என்ற பிரம்மாண்ட அந்நியச் செலாவணி கையிருப்பை வைத்து ள்ள இந்தியாவின் நாணயமே டொலரின் வலுவடைதல் காரணமாக மதிப்பிழந்து வரும் வேளையில், வெறும் 6.8 பில்லியன் டொலர் தேறிய வெளிநாட்டுக் கையிருப்பை மாத்திரம் கொண்டுள்ள இலங்கை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள 900 மில்லியன் டொலர் நிதியை மட்டும் நம்பி எவ்வாறு ரூபாவின் ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்திற்குப் பேணப் போகிறது என்ற கேள்வி பொருளாதார ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.
மறுபுறத்தில், நாட்டின் பிரதான அந்நியச் செலா வணி உறைவிடமாக விளங்கும் சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சி அரசாங்கத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டிய மாதமாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 257 மில்லியன் டொலராகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இவ்வாண்டு ஏப்ரலில் வெறும் 157 மில்லியன் டொலராகக் கடுமையாகச் சரிந்துள்ளது. ஒரே வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் 100 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது.
இதேபோக்கு அடுத்தடுத்த மாதங்களிலும் தொடரு மானால், ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர் வருமான இழப்பை நாடு சந்திக்க நேரிடும். அதிர்ஷ்டவசமாக, இக் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Worker Remittances) கடந்த ஆண்டின் 2.5 பில்லியன் டொலரிலிருந்து 3.1 பில்லியன் டொலராக அதிகரித்துக் காணப்படுவது ஓரளவுக்கு ஆறுதலளித்தாலும், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியை இதனால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது.
இந்த வருமான இழப்பு மற்றும் டொலர் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்காக, வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதித்துள்ள தோடு, கடன்களுக்கான உச்ச வரம்புகளையும் அறிமுகப்படுத்தியுள் ளது. இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் தற்காலிகமாக டொலர் வெளியேற்றத்தைத் தடுத்தாலும், உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளையும் நடுத்தர வணிகங்களையும் முடக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோவின் அண்மைக்காலக் கூற்றுக்கள், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பா ளர் சபை ஒப்புதல் அளித்து, 695 மில்லியன் டொலர்களை விடுவிக்கத் தீர்மானித்திருப்பது தற்போதைய அநுர அரசாங்கத்தின் கொள்கை அமுலாக்கத்திற்கு கிடைத்த ஒரு சான்றிதழாக இருந்தாலும், கடன்களை மறுசீரமைப்பதில் நிலவும் சவால்கள் இன்னும் தீரவில்லை.
மத்திய கிழக்கு மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக, இலங்கையின் உள்நாட்டுப் பணவீக்கம் கடந்த மார்ச்சில் இருந்த 2.2 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 5.4 சதவீதமாக உயர் வடைந்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரித்துள்ள படி, உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டில் 14 பில்லியன் முழு நேர வேலை இழப்புகளுக்குச் சமமான பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. இது கொரோனா தொற்றுக் காலப் பாதிப்புகளை விடவும் மிக மோசமானது என்பதால், அதன் நேரடித் தாக்கம் இலங்கை யின் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புச் சந்தைகளிலும் எதிரொலிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இந்த இக்கட்டான சூழலில், அநுர அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அது பொருளாதாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
முன்னதாக, நாட்டின் பொருளாதாரம் திருப்தி கரமான பாதையில் பயணிப்பதாகக் கூறிவந்த அரசாங்கம், இப்போது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஆபத்துக்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டு வது போல, டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, நிலைமை கைமீறிச் சென்றால் அது மற்றுமொரு மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். கடந்த கால கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமும் கொரோனா பெருந்தொற்று என்ற உலகளாவிய புற அதிர்ச்சியைச் சரியாகக் கையாளத் தவறியதாலேயே, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி வீழ்த்தப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக யுகத்தில், பொரு ளாதாரச் சுமைகளால் விரக்தியடையும் மக்களின் கொந்தளிப்பை ஒருங்கிணைத்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் எளிதானதாக மாறியுள்ளது. எனவே, அநுர அரசாங்கம் வீராப்புப் பேச்சுக்களைக் கைவிட்டு, வட்டிவீத உயர்வுகள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் தட்டுப்பாடுகள் மற்றும் விலை உயர்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரக் கடிவாளத்தை தனது கைகளில் வைத்திருக்க முடியும்.