மீளவும் போராடத் தயாராகும் கேப்பாப்பிலவு மக்கள்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 55பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார்.

குறிப்பாக கேப்பாப்பிலவு காணிவிடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, கடந்த11.03.2026ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கான பிரதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு PS/DA/SAD/06/41-Vol.01  இலக்கமுடைய கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு ஜனாதிபதி செயலகத்தினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட அக்கடிதத்தின் மூலம், கேப்பாப்புலவு காணிவிடுவிப்புத்தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட்ட உதவிச் செயலாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு 19.05.2026ஆம்திகதி  கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பில் சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ற அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில், அந்த பிரதேசத்தில் காணி உரிமையுடைய 55 பேரில் 44 பேர் மாற்று காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இணங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் 40 பேர்ச்சஸ் வீதமான காணிகள், வீடுகள் மற்றும் பாடசாலை வசதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 11 பேர் மாற்று காணிகள், வீடுகள் அல்லது அரசாங்க மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால், முகாமிற்கு சொந்தமான காணியின் இறுதி பகுதியிலிருந்து 6.75 ஏக்கர் ஒதுக்கப்பட்டு, இராணுவத்தின் தொழிலாளர் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் பெறுமதி 538 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதால், முகாமை இடமாற்றம் செய்வது அதிக செலவை ஏற்படுத்தும் என்றும், குறித்த காணியானது நந்திக்கடல் களப்பு சார்ந்த பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இராணுவத் தொடர்பாடல் முறைமைகளைப் பேணிச்செல்வதற்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மாற்று காணிகள், வீடுகள் அல்லது அரசாங்க மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காத எஞ்சிய 11 பேருக்கு முகாமிற்கு சொந்தமான காணியின் இறுதி பகுதியிலிருந்து 6.75 ஏக்கர் ஒதுக்கப்பட்டு, இராணுவத்தின் தொழிலாளர் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய சாத்தியக்கூறு தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் ஊடாக வினவுதலை மேற்கொண்டு. இது தொடர்பாக பொருத்தமானவாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வியாழக்கிழமை (28.05.2026) கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிகள் சிலரை முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்திற்கு அழைத்து இந்தவிடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல 44பேர் மாற்றுக்காணிகளைப் பெறுவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்ததுடன், கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 55பேருடைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டினையும் தெரவித்தனர்.

அதேவேளை கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில், தமது கோரிக்கைகளையும், நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தனர்.

அத்தோடு இந்த கேப்பாப்பிலவு காணிவிடுவிப்புத்தொடர்பில் தொடர்ந்து பாராளுமன்றில் குரல்கொடுக்குமாறும் இதன்போது கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.