கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவான ஏறத்தாழ 5 சதவீத வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இலங்கையின் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து விளக்கமளித்த ஆளுநர், 2022 ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியான மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காட்டும் வகையில், இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகவும் நிலையான மற்றும் நிர்வகிக்கக்கூடிய மட்டங்களில் உள்ளதால், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய பொருளாதார நிலை கணிசமான அளவு வலுவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கம் ஆரோக்கியமான குறிகாட்டிகளைப் பேணி வருவதுடன், வெளிப்புற சவால்களை எதிர்கொள்வதற்கான பின்னடைவுத் திறனை வளர்த்துக் கொண்டுள்ளதால் நிதி நிலைமைகளும் மேம்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்க முன்னர், இலங்கையின் வெளிவாரி, பணவியல் மற்றும் நிதித்துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருந்ததாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான வெளிப்புற சவால்கள் ஏற்படும் போது, இலங்கையைப் போன்றே ஏனைய பொருளாதாரங்களும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.



