தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு அமைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியிலான வீட்டுத்திட்டங்களின் பெறுமதி அதிகரிக்கப்படவேண்டும் என தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில் ரவிகரனின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்ற குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பது எனவும் இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. இதன்போதே ரவிகரனால் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டதுடன், மேற்கண்டவாறு முடிவும் எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் தற்போது ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்துக்கென நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு கட்ட முடியாது.
தற்போது வெவ்வேறு திட்டங்களினூடாக மக்களுக்கு வீட்டுக்காக அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
குறிப்பாக மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் என்பவற்றால் 2 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படவேண்டும்.
ஏற்கனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன. தற்போதும் வீடமைப்பு அதிகாரசபையில் இவ்வாறு வீட்டுத் திட்டங்களுக்கென ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகின்றபோது மீண்டும் வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாமல் இடைநடுவே கைவிடப்படுகின்ற நிலையே தோன்றும்.
இது தொடர்பில் ஏற்கனவே மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல இந்தக் கூட்டத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுத்து உரிய தரப்பினருக்கு அனுப்புவோம். இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றிலும் இது தொடர்பில் எம்மால் பேசப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கூறுகையில்,
இந்த விடயத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மாத்திரமல்ல, சமுர்த்தி வீட்டுத்திட்டத்துக்கும் இவ்வாறுதான் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில் சமுர்த்தி வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வழங்குமாறு எம்மால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்ற இந்த கூட்டத் தீர்மானத்தையும் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்போம் என்றார்.



