இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் செவ்வாய்கிழமை (5) கொழும்பில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
‘நாம் மலையகம்’ அமைப்பின் ஏற்பாட்டில் ‘நாம் நீலகாமம்’ எனும் தொனிப்பொருளில் இந்த அறவழிப் போராட்டம் இடம்பெறவுள்ளது. அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை, நீலகாமம் தோட்டப்பகுதியில் முகக் கவசம் அணிந்த நபர்களால் நபரொருவர் தாக்கப்பட்டு, அவர்களது குடியிருப்புக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாகியதோடு, குறித்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. எனினும் ஓரிரு தினங்களின் பின்னர் அவர் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்ததோடு, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு மாத்திரமன்றி, தசாப்த காலங்களாகத் தொடரும் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டத்துக்கு தீர்க்கமான தீர்வைக் கோரி இன்றைய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இது குறித்து போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில், நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறையானது தனித்த ஒரு சம்பவம் அல்ல் அது மலையக மக்களின் உரிமைகளை நசுக்கும் நீண்டகால அடக்குமுறையின் ஒரு அங்கமாகும். எமது மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்தும், இன்னும் சொந்தக் காணி இன்றி அகதிகளாக வாழும் நிலை மாற வேண்டும். நீலகாமம் மக்களுக்காகவும், ஒட்டுமொத்த மலையகச் சமூகத்தின் காணி உரிமைக்காகவும் முன்னெடுக்கப்படும் இந்த அறவழிப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் என்றனர்.
இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



