எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும் என்று எல்லை நிர்ணய குழுவின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தால் புதிதாக நியமிக்க உத்தேசிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகி எல்லை நிர்ணயம் தொடர்பான விபரங்களை எடுத்துரைக்க தங்களது தரப்பு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முறையான பரிசீலனைகள் ஏதும் இல்லாமலே எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளில் ஒருசிலர் தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுகிறார்கள். ஒருசிலர் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களிலும் இவ்வாறான நிலையே காணப்படுகிறது என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேர்தல் முறைமை சிக்கல்குரியதாகவே காணப்படுகிறது. தேர்தல் முறைமை தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்கள் மற்றும் தெரிவுக்குழுக்களுக்கு பல யோசனைகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கலப்புத் தேர்தல் முறைமை சிறந்ததாக அமையும் என்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் எல்லை நிர்ணய குழுவின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபைத் தேர்தலை பல்வேறு காரணிகளால் நடத்தாமல் இருப்பது முறையற்றது. எல்லை நிர்ணய விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது முறையற்ற செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



