தொல்பொருள் விடயங்களையோ அல்லது மதத் தலங்களையோ முன்னிறுத்தி நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று (16) நடைபெற்ற “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை: தேசிய வீட்டுத் திட்டம் 2026” இன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
“இன்றும் கூட சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தலங்களை மையமாக வைத்து ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சிக்கின்றனர். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு என நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மீண்டும் இனவாதம் தலைதூக்க இந்த அரசாங்கம் இடமளிக்காது” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி இருந்தது. அரசாங்கம் இனவாதத்தைப் போதித்தாலோ அல்லது மக்களின் சொத்துக்களைத் திருடினால் மட்டுமே மக்கள் அரசிடமிருந்து தூரமாவார்கள்.
ஆனால், நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் ஒரு நாட்டை உருவாக்குவோம். இதற்கான முழுமையான உத்தரவாதத்தை வழங்குவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே தமது அரசாங்கத்தின் இலக்கு என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சாவகச்சேரியில் 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட, நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பாரிய திட்டத்தை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



