2029 ல் நாமல்தான் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நம்பிக்கை

2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் எனவும் தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார், எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.

கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார். எமது கட்சியில் தற்போதுள்ள சிறந்த வேட்பாளர்தான் நாமல் ராஜபக்ச. அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்.” எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

அதேவேளை, நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உட்பட அனைத்து எதிரணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.