“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற்றியபோதே சிறீதரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, சமாதானம் நிலவும் தற்காலத்திலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்த எனது நீண்டகால கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுங்கோன்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர்.
தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
நான் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முறையான நிபுணத்துவம் உடையவர்களால் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
எனவே இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என்ற விடயம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு இடைக்கால நீதிப்பொறிமுறையின் ஓரங்கமாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிக்கான அணுகலை மேற்கொள்வதற்கும், இழப்பீட்டை பெறுவதற்கும், விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதற்குமான வாய்ப்பு கிட்டவேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றார்.