மன்னார் காவல் நிலையத்தில் சந்தேக நபர் சடலமாக மீட்பு: கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு..!

பேசாலை காவல்நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர்  மரணம்-காவல்துறையினர் அடித்ததால் மரணம் என தாய் குற்றச்சாட்டு. - Global Tamil  News

மன்னார்-பேசாலை காவல் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் (03) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேசாலை காவல் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் வியாழக்கிழமை (02) மாலை போதை பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குறித்த நபரை பேசாலை காவல்துறையினர் துரத்தி பிடித்ததோடு இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை காவல்துறையினர், பேசாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த நபர் காவல் நிலைய தடுப்புக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று (03) காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன்பின்பு, பேசாலை காவல் நிலையத்திற்கும் சென்று காவல் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பேசாலை காவல் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று (03) காலை வருகை தந்து தனது மகனை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துள்ளார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.