உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்!

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது, தொடர்ச்சியான கோரிக்கையை ஐ.நா புறந்தள்ளுகிறது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அவ்வாறிருந்தபோதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.

இந்த நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நிலையே  தொடர்ச்சியாக இருக்கின்றது.

அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கிறது.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.

தொடர்ச்சியாக நீதி கோரி போராடிவரும் நாம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர்.