செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழத் தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை,அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள்.
அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது.
ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர்.