நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் :நீதியமைச்சர்

‘புதிய அரசியமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை சரியாகக் குறிப்பிட முடியாது’ என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றில் இது தொடர்பில் கருத்துரைத்த அவர், ‘ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எல்லா விடயங்களையும் ஆறு மாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது’.

‘புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.’நல்லாட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளது. மேலும் பல அறிக்கைகளும் உள்ளன’.

‘கால எல்லை பற்றி கேட்டால் என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் கொண்டு வரப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். குறித்த முறைமையைத் தக்க வைப்பது தொடர்பில் எவ்வித பேச்சும் எமது தரப்பில் நடக்கவில்லை’ என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.