தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அறிவிக்கும் பொறுப்பு சகல பிரஜைகளுக்கும் உள்ளது: அரசாங்கம் அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்ககுமாயின் அதனை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கான பொறுப்பு நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (26) செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இயங்குவதாகக் கூறப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘தேசிய பாதுகாப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை’.
‘குற்ற புலனாய்வு திணைக்களம் அதேபோன்று புலனாய்வு பிரிவு தொடர்பில் தேரர் நன்கு அறிந்துள்ளார்’.
‘ஆகவே, தேசிய பாதுகாப்பு விடயம் தொடர்பில் தகவல் தெரியுமாயின் அதனை அவர்களிடம் வெளிப்படுத்த முடியும்’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

‘குற்ற புலனாய்வு திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தகவல்களை சேகரித்து வருகிறது’. ‘இந்த நிலையில், எந்தவொரு தரப்பினரும் அறிந்திராத தகவல்கள் தேரரிடம் இருக்குமாயின் அதனை சம்பந்தப்பட்ட தரப்பிருக்கு தெரியப்படுத்துவது அவரது பொறுப்பாகும்’.
எனவே, தேசிய பாதுகாப்பு விடயம் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெறுமாயின் அதனை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்கான பொறுப்பு நாட்டின் பிரஜை என்ற வகையில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.