யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் எந்த நிதியும் ஒதுக்கப்படாமல் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு என எந்தவொரு விசேட நிதியும் ஒதுக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்துக்கு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாலங்கள் அமைப்பதற்கு வீதிகளை புனரமைப்பதற்கு என பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
அதேபோன்று கிழக்கு மாகாணமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணமாகும். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் மாகாணம். கிழக்கு மாகாண சபைக்கு கூட அரசாங்கத்தினால் போதியளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இயற்கை செயற்கை அனர்த்தங்களால் அழிவடைந்த மாகாணமாகும்.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள், பாடசாலை கட்டிடங்கள் அங்கு அழிவடைந்திருக்கின்றன.அவற்றை மீள கட்டியெழுப்ப எந்தவொரு நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
எனவே கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு வரவு செலவு திட்ட அறிக்கையில் ஒதுக்கப்படாவிட்டாலும் அரசாங்கத்தின் மூலதன நிதியில் இருந்து இதன் பிறகும் ஒதுக்கீடு செய்ய முடியும். அதனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு தேவையுடன் இருக்கிறது் அங்கு கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு போதுமான கட்டிடம் இல்லை. வெள்ளம் வரும்போது பாரியளவில் பல்கலைக்கழம் பாதிக்கப்படுகிறது. அதனால் வெள்ள நிலைமையில் இருந்து பாதுகாக்க நிரந்த வேலைத்திட்டம் ஒன்றை அங்கு மேற்கொள்ளப்படவேண்டும்.
தென் மாகாணத்தில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் மீன்பிடி துறைமுகம் இருக்கின்றபோதும் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு மீன்பிடி துறைமுகம் இல்லை.அதனால் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து முழு கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் அதனை அபிவிருத்தி செய்துகொடுக்க வேண்டும்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் பல அரச கட்டிடங்கள் விதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன. அதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாழைச்சேனை துறைமுகத்தை கட்டியெழுப்பவும் நிர்வாக ரீதியில் இருந்துவரும் பிரச்சினையை திர்க்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



