காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி கிரிகைகள் எதிர்வரும் வியாழக் கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தமது 62 ஆவது வயதில் நேற்று (09) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி உயிரோடைத் தமிழ் வானொலியில் நாளாந்தம் தாயகச் செய்திகளை தொகுத்து வழங்கியிருந்தார்.
அத்துடன் வாராந்தம் தாயகக்களம் என்ற நேர்காணலையும் வானொலிக்காக அவர் செய்து வந்தார்.
இராஜநாயகம் பாரதி அவர்கள் வாராந்தம் இலக்கு மின்னிதழில் அகிலன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
கடந்த சில வாரங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்று (09) அவர் காலமானார்.
அன்னாரின் புகழுடல் பலாலி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (13) வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘வியாழன் அன்று முற்பகல் 9 மணியளவில் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு 11 மணியளவில் இடம்பெறவுள்ள ஈமக் கிரியைகளைத் தொடர்ந்து பிற்பகல் 1:30 அளவில் கொக்குவில் இந்து மயானத்தில் அன்னாரின் புகழுடல் தகனம் செய்யப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலமாகிய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு பல அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும், பொது அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


