அதிபர் ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு!

அமெரிக்காவின் 47 ஆவது  அதிபராக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார்.

அந்த உத்தரவுகளில் ஒன்று தான். பெப்ரவரி 20ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது என்பது.

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை இரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை இரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன.

இந்த உத்தரவின் பிரகாரம் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சிசேரியன் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பல தம்பதிகள் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

7, 8 மாதம் மற்றும் 9 மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் மருத்துவர்களிடம்அ றுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றக்கொள்ள முயன்று வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், அதிபர் ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை வரும் பிப்ரவரி 19-ம் திகதி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்ள வெளிநாட்டு பெண்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

சிசேரியன் தொடர்பாக எனக்கு மட்டும் ஒரு நாளில் 20 கோரிக்கைகள் வருகின்றன. அமெரிக்க சட்டவிதிகளின்படி சிசேரியன் மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்ப மண்டல பாதிப்பு, எடை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றார்.