கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் முன் பக்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம் அளித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள கான்பெர்ரா நகரில் அந்நாட்டு வெளியுறுவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உடன் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நான் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதையும் வழங்காமல் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்கும் முறையை கனடா வளர்த்துக் கொண்டுள்ளது.
இரண்டாவதாக, கனடாவை பார்க்கும்போது, எங்களைப் பொறுத்தவரை எங்கள் நாட்டு தூதர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாவது சம்பவம், அந்த நபர் பேசியதைப் பற்றியது. அந்த வீடியோவைப் பாருங்கள். தீவிரவாத சக்திகளுக்கு அங்கு (கனடாவில்) அளிக்கப்படும் அரசியல் இடத்தை அது ஓரளவு வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



