இலங்கைக்கான நிதியுதவிகளின் போது நிபந்தனைகள் எவையும் விதிக்கவில்லை : அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை நாங்கள் உதவ முன்வந்தோம் வெளிப்படையாக சொல்வதென்றால் யாரும் உதவ முன்வராதபோது நாங்கள் உதவமுன்வந்தோம் என  குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இதனை செய்தோம் என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்தக்க தருணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் உதவினோம்  4.5 மில்லியன் டொலர் வலுவான ஆதரவை வழங்கினோம் என  ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்( கேள்வி கேட்டவர்  இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என தெரிவித்தார்) இலங்கையில் அரசியல் மாற்றங்கள் குறித்து இலங்கையே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல்ரீதியாக என்ன நடைபெறுகின்றது என்பதை அந்த நாட்டின் அரசியலே தீர்மானிக்கவேண்டும் இறுதியில் எங்களின் ஒவ்வொரு அயல்நாட்டிற்கும் அவர்கள் இயங்கும் செயற்படும் வழிமுறையுள்ளது, எங்களிற்கு எந்த இயக்கவியல் சரியானது என நாங்கள் கருதுகின்றோமோ அதனை  அவர்கள் பின்பற்றவேண்டும் என நாங்கள் பரிந்துரைப்பது எங்கள் நோக்கமல்ல என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளின் அரசியல் நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயலவில்லை,ஒவ்வொரு அயல்நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயல்வதில்லை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இயக்கவியலை கொண்டிருக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.