‘போராட்டம் என்ற பெயரில் வன்முறை, விசாரணை வேண்டும்’: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தல்

“வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன என குற்றம் சுமத்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ,வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் கடந்த மாதமும், இம்மாதமும் நடத்திய போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களாக மாறியது. இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர்கள், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்பது இரகசியமாகவே உள்ளது.

இதைத்தொடர்ந்து, அவருடைய மகன் சஜீப் வாசத்தின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ஷேக் ஹசீனா 3 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர் வங்கதேச கலவரம் பற்றி ஷேக் ஹசீனா முதன்முறையாக அந்த அறிக்கையின் வாயிலாக மவுனம் கலைத்துள்ளார். இது வங்கதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த அறிக்கையில் ‘வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்.

வன்முறையாளர்கள் வங்கதேச விடுதலைக்காக ரத்தம் சிந்திய எனது தந்தை ‘பங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மானையும், ஆயிரக் கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதித்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் 15 ஆம் திகதியை  வங்கதேச மக்கள் துக்க தினமாகக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். பங்கபந்து பவனில் திரண்டு வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கோருகிறேன்.’ என மேலும் தெரிவித்துள்ளார்.