இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சுவிற்சர்லாந்து நிதி உதவி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக 500,000 சுவிஸ் ப்ரான்க் (CHF) இனை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) இந் நிதியைப் பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவும் நோய்கள் மற்றும் இதர கோளாறுகளுக்கான சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் உள்ளடங்கலாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும். அத்துடன், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து ஊக்குவிப்புக் கொடுப்பனவு, மாணவர்களுக்கான சிற்றுணவுகள் போன்ற வேலைத்திட்டங்களினூடாக பின்தங்கிய பாடசாலைச் சிறுவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடைகளின்றி தொடர்வதற்கும், ஏற்கனவே தவறவிட்ட கல்விச் செயற்பாடுகளை திரும்பப் பெறுவதற்கான வகுப்புக்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்கவும் இந் நிதி பயன்படுத்தப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிரான வன்முறை, புறக்கணிப்பு மற்றும் குடும்ப உறவுப் பிரிவினை என்பவற்றுடன் தொடர்புடைய வழக்குகளை நிர்வகிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உதவுகின்றது.

இங்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கை நாட்டுப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூத் ,

“கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் துவக்கத்திலிருந்தே மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் தேவைகளை ஈடுசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் பங்காளி நிறுவனங்களும் விரைவாக செயற்பட்டன.

இப் பணியில் எமக்கு ஒத்துழைத்த நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந் நெருக்கடி இன்னும் தொடர்வதால் இந்த ஒத்துழைப்புக்களை தக்கவைப்பதற்கும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது குடும்ப, சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்விலும், இடர்களிலும் ஏற்படுத்தும் தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்கான தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கு சுவிட்சர்லாந்தின் நிதிப் பங்களிப்பு பயன்படுத்தப்படும். இது நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக பயனுறுதிவாய்ந்த மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நிறுவனங்களுக்கும் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளுக்கும் துணைபுரியும்.

தொடர்ந்து உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைத் தீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி. டொமினிக் பர்க்லர்,

“இன்று இலங்கை முகங்கொடுக்கும் இது போன்ற நெருக்கடிகளின் போது குறித்த சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் போன்று பல பங்காளி நிறுவனங்களுடன் நாம் மிகவும் நெருக்கமாக செயற்பட்டோம்.

இந்த ஒத்துழைப்பானது நாம் இலங்கை மக்களுடன் பேணி வரும் எமது நீண்டகால கூட்டொத்துழைப்பினை பறைசாட்டுகின்றது” என தெரிவித்தார்.

மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய 2.4 மில்லியன் சிறுவர்களுக்கு போசணை, சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான குடிநீர், உளச் சுகாதார சேவைகள் மற்றும் தொடர்ந்தேர்ச்சியான கல்வி வாய்ப்புக்கள் போன்ற சேவைகளை வழங்குவதற்குத் தேவைப்படும் வளங்களை இலங்கைக்கு தந்து உதவுமாறு 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.