ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்,பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம்,கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய துறைகளின் கீழ் ‘பன்முக அச்சுறுத்தலுக்கு’ உள்ளாகியுள்ளனர். வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன் பெற அல்லது பொருட்களை அடகு வைக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு அறிக்கைகளின் மூலமும் இலங்கையின் கள யதார்த்தம் உண்மையாக வெளிப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்து நாட்டின் வறுமையைக் குறைத்துள்ளதாகவும், அரசாங்கத்தின் திறைசேரி நிரம்பி வழிவதாகவும் குறிப்பிடுகிறது.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நுண்பொருளாதார அறிவிப்புகளுக்கும், நாட்டின் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையிலான இடைவெளி கவலைக்குரியது என தினன தகுன அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் கீழ் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதன் ஊடாக மாத்திரம் நாட்டில் நிலவும் உண்மையான வருமான வீழ்ச்சியையும் வறுமை நெருக்கடியையும் மறைத்துவிட முடியாது
விசுவல் கெபிலடிஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியாக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், கொள்வனவு திறன் சமநிலை முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய உலகளாவிய குறைந்தபட்ச ஊதியச் சுட்டெண் மூலம் நாட்டில் நிலவும் நெருக்கடியின் தீவிரத்தன்மை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் 130 நாடுகளில் நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு செய்யும் திறனில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் உண்மையான கொள்வனவு திறனின் அடிப்படையில் நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 200 டொலர்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின், பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி,சுகாதாரம்,கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய துறைகளின் கீழ் ‘பன்முக அச்சுறுத்தலுக்கு’ உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன் பெற அல்லது பொருட்களை அடகு வைக்கத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த இரண்டு அறிக்கைகளின் மூலமும் இலங்கையின் கள யதார்த்தம் உண்மையாக வெளிப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்து நாட்டின் வறுமையைக் குறைத்துள்ளதாகவும்,அரசாங்கத்தின் திறைசேரி நிரம்பி வழிவதாகவும் குறிப்பிடுகிறது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நுண்பொருளாதார அறிவிப்புகளுக்கும், நாட்டின் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையிலான இடைவெளி கவலைக்குரியது.
முதன்மை கணக்கின் இருப்பு நேர்மறையான மதிப்பைப் பெறுதல், வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் வைத்திருத்தல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்து திறைசேரி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எவ்வாறான சாதகமான கருத்துக்களை முன்வைத்தாலும், அந்த ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பது அறிவியல் பூர்வமான தகவல்கள் மூலமும் கள யதார்த்தத்தின் மூலமும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையான வருமானத்தை ஈட்டும் திறனில் இலங்கை உலகளவில் மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தில் உள்ள பாரிய குறைபாடாகும்.
தெற்காசிய பிராந்தியத்தில் உண்மையான உழைப்பு கொள்வனவு திறனில் இலங்கை மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதை இச்சுட்டெண் காட்டுகிறது. இது பாகிஸ்தானில் 570 டொலர்களாகவும்,நேபாளத்தில் 490 டொலர்களாகவும்,பங்களாதேஷில் 379 டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் இந்த மதிப்பு 233 டொலர்களாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் வட்டி செலுத்தப்படாத அரச உபரி வருவாய் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால்,பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை விரிவுபடுத்துதல், மறைமுக வரிகளை உயர்த்தல் மற்றும் பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி உள்நாட்டிலிருந்து வருவாயை திரட்டுவதன் மூலமுமே அரசாங்கம் இந்த முடிவை எட்டியுள்ளது.
அரச கடன் ஸ்திரத்தன்மை அவசியமானது என்ற போதிலும், வீடுகளின் உண்மையான வருமானத்தைக் கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கி எட்டப்படும் நிதி நிலுவைகளை ஒரு உண்மையான பொருளாதார வெற்றியாக வரையறுக்க முடியாது. பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் மூலம் நீண்டகால பொருளாதார இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டாலும், மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு அதிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்காது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ஒரு யதார்த்தமாகும்.
அத்தியாவசிய நுகர்வோர் மற்றும் உற்பத்திகளுக்கான உள்ளீடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமையைத் தளர்த்தி, நிதி ஒருங்கிணைப்பின் சுமையை சாதாரண நுகர்வோர் மீது மட்டும் சுமத்துவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கக்கூடிய வகையில், குறிப்பாக அதிக மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியம் என்பது வெறும் நிதி இலக்குகளை அடைவதை வைத்து மட்டும் அளவிடப்படாமல், உண்மையான ஊதிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் உண்மையான கொள்வனவு திறன் இயல்பு நிலைக்கு திரும்புவதை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதனை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
நிலையான தேசிய பொருளாதார மீட்சிக்கு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கண்ணியமான மற்றும் நியாயமான வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்யும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே இன்றைய அரசியல் மற்றும் நெறிமுறைப் பொறுப்பாகும் என்பது எமது நம்பிக்கையாகும்.



