46 தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும்- யாழ் ஆளுநரிடம் கோரிக்கை

10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (திங்கட்கிழமை) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

அதன் போது, நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார்.

மேலும் கோமகன் விளக்கமளிக்கையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களும் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களும் உள்ளனர்.

இதில் தீர்ப்புகளுக்காக தவணை இடப்பட்டவர்களும் உள்ள நிலையில் தீர்ப்பு வழங்காது வழக்கை ஒத்தி வைக்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான வழக்குகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அவர்களை புனர் வாழ்வு ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குறித்த சந்திப்பில் மெய்நிகர் வழியாக இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பக்கபலமாக செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.