செம்மணி மனித புதைகுழியில் 318 மனித என்பு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 19வது நாளான இன்று 318 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் சுத்தம்செய்யப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றுள் இதுவரை காலமும் மொத்தமாக 20 தொகுதி எலும்புக்கூடுகள் குவியல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதில் சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.