ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது – பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்

UniOfJaffna ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது - பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறி கோரோனோ தனிமைப் படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளமை கண்டிக்கத் தக்கது என பல்கலைக் கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறித்த ஆர்ப்பாட்டமானது  ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக் கழகம் தொடர்பாக நேற்று (08.07.2021)  பாராளு மன்றத்தில் விவாதிக்கப் படவிருந்த நிலையில், கவ்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழிற் சங்கம் என்ற வகையிலும் நியாயத்திற்காக பாடுபடுகின்ற ஒரு அமைப்பு என்ற ரீதியிலும் தோழர் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது போராட்ட சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.

இலங்கை ஆசிரியர் சங்கமானது எமது பல்கலைக் கழக ஊழியர் சங்கத்துடன் தோழமை உறவு பூண்டு, தொழிற் சங்க மற்றும் மனித உரிமை பொதுத் தளங்களில் மேதினம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் எமது சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதோடு,  எமது சங்க அங்கத்தினர் மீதான உள்ளக விசாரணைகளுக்கு அவர்களின் சார்பில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்னிலையாகி உதவியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா இலங்கையையும் விட்டு வைக்கவில்லை என்பது உண்மை தான் எனினும் பெருந் தொற்றுக் கால சுகாதார நடை முறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்பாடு களையும் சுகாதார நடை முறைகளினை பின்பற்றி நடை பெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் நேற்றைய ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான நியாயமற்ற அத்து மீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் மக்களினதும் மக்கள் செயற்பாட்டாளர் களினதும் செயற்பாடுகளை நியாய பூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களையும், அரசாங்கத்தினையும்; வேண்டி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது - பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்