’20’ ஐ ஆதரித்தவர்களை வெளியேற்றுங்கள்; ஹக்கீம், ரிஷாத்தை வலியுறுத்துகின்றார் சுமந்திரன்

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20 இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது;

“அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே, 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும், ரிஷாத்தும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும்” என்றார்.