திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் வைத்து ஐந்து மாணவர்கள் சிறிலங்காவின் ஆயுத படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மனோகரன் ரஜிகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோஹிதராஜா ரொஹான், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர்.
இறந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) வல்வெட்டி துறையில் அமைந்துள்ள எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் குறித்த மாணவர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படத்திற்கு அவர் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.