மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மீனவர்கள் போராட்டம்

வாகரை வட்டுவான் இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள்  ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி  இறால் பண்ணைக்கு முன்னால்  நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம், இறாலோடை ஆகிய மீனவ அமைப்புக்கள் இணைந்து குறித்த இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில்  காயன்கேணி பழைய பாலத்துக்கு அருகில் 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து அசுத்தப்படுத்தாதே  வாவி நீரை அசுத்தப்படுத்தாதே, அழிக்காதே அழிக்காதே மீன் வளத்தை அழிக்காதே, ‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’ ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, போன்ற பதைதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட ஊர்வலமாக இறால் பண்ணைக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது வட்டவான் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையினால் குறித்த வாவி அசுத்தமடைந்து வருவதாகவும், குறித்த இறால் பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் நீரினால் ஆற்றில் மீன்கள் இறந்து காணப்படுவதுடன்  மீன் இறால் வளங்கள் அழிந்து கொண்டு போவதினால் தங்கள் பொருளாதார ரீதியில் பின்நோக்கி போவதாகவும்.இது தொடர்பாக யாரிடம் முறையிடுவது என்றும் தெரியாமல் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதனை கவனத்தில் எடுத்து இப் பிரச்சினைகளை தீர்க்க  நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.