ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் பயனில்லை;சிகிச்சையை நிறுத்தியது அமெரிக்கா

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய சோதனையில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஆட்டத்தையே மாற்றப் போகிறது என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கோவிட்-19 கிசிச்சைக்கு அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினார்.

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் அவசர சிகிச்சைக்காக இந்த மருந்தைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்தது.

ஆனால், இந்த மருந்து கொரோனா சிகிச்சையின்போது எந்த பலனையும் தரவில்லை என்பதும், மக்களுக்குத் தொற்று ஏற்படுவதையும் இந்த மருந்து தடுக்கவில்லை என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என அந்த அமைப்பு இப்போது தெரிவித்துள்ளது.