ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியாக மாறிவருவதாக நளின் பண்டார சாடல்

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

“சேவை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுகின்றது.

போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நிலைப்பாட்டியேலே அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.

எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன், மஹிந்த தரப்பினர் 2015 இற்கு முன்னராக நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று வருகின்றது” என்றார்.