வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தலுக்கு முன் வெளியிடக் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விவரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி
இன்டர்நௌல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மையுடையவர், பொறுப்புக் கூறுபவர்
என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது
சொத்து விவரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந் நிறுவனம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.