வெளிநாட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் – புதிய விதிமுறைகள் வெளியீடு

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்களுக்கும், வர்த்தக மாலுமிகளுக்கும், கடற்படை பாதுகாப்பு பிரிவினருக்கும், இரட்டை பிரஜாவுரிமை உடையோருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இவை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின் கீழ் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட அனைவரும் நாட்டுக்குள் வரும் போது பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அல்லது ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

11 தொடக்கம் 14 நாட்களுக்குள் முன்னெடுக்கப் படும் பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகா விடின் மட்டும், 14 ஆவது நாள் நிறைவில் மத்திய நிலையத்திலிருந்து அவர்கள் வீடுதிரும்ப முடியும். பி.சி.ஆர். பரிசோதனைகளில் கோவிட் நோயாளராக அடையாளம் காணப்படின் அவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவர்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட இலங்கையர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் நாட்டிற்கு வருகைதரும் போது பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். இதன்போது, கோவிட் தொற்று உறுதி செய்யப்படாத விடத்து, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 14 நாளின் நிறைவில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட வில்லை எனின், அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவர்.

இதேவேளை அனுமதி பெற்று நாட்டுக்கு வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஐ.நா. பிரதிநிதிகள் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதன் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பின்னர், 11 -14 நாட்களில் இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனையிலும் தொற்று உறுதிப்படுத்தப்படா விடின் அவர்களின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வரும். இதற்கு மேலதிகமாக நாட்டுக்கு வருகை தரும் அனைத்து வெளி நாட்டவர்களையும் அவர்கள் ஏற்றிக் கொண்ட தடுப்பூசி தொடர்பில் ஆராய்ந்து, முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.