விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கிப் போராடிய மீனவர்கள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆரதவாக, தமிழகத்தில் மதுரை, திருச்சி, இராமேஸ்வரம், கோவை போன்ற இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2020 மீன்பிடி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் போராட்டம் ஒன்று மீனவர்களால் நடத்தப்பட்டுள்ளது.

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி இதற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 2020 மீன்பிடி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது தவிர, தங்கச்சிமடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவ பெண்கள் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தர்கா பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.