விக்கியின் கூட்டணிக்கும், கூட்டமைப்புக்கும் வித்தியாசம் இல்லை: கஜேந்திரகுமார்

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஎன்ற பெயரில்உருவாக்கப்பட்டுள்ளபுதிய கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்­­ “பி” அணி. கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லை. தமிழ் மக்களின் உண்மையான நேர்மையான-தலைமைத்துவமாக எங்கள் தலைமைத்துவம் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.”

இப்படித்தெரிவித்திருக்கின்றார்தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுத் தாம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கை யில் –

“நான்கு நபர்கள் கூடி,நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன எனச் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. எம்மைப் பொறுத்த வரை அது நான்கோ, பத்தோ, பதினைந்தோ என்பதல்ல, உண்மையில் எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாகச் செயற்படுகின்றனர் என்பதே முக்கியமானது.

நாம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – கூட்டமைப்பில் இருந்து விலகிய நாளில் இருந்து நாங்கள் கொள்கை ரீதியாக அந்தக் கூட்டமைப்பு பிழை விடுகிறது, ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற அளவுக்கு விலை போயிருக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பத்து வருடங்களாக முன்வைத்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில் ஒரு புதிய தலைமைத்துவம் – நேர்மையான தலைமைத்துவம் அவசியமென்ற வகையில் இந்தப் பத்து வருடங்களாக இயங்கிவந்த நிலையில் இன்று இரண்டாம் பெரும் கட்சியாக வடக்குகிழக்கில் இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கையில் எங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காக கொள்கை ரீதியாக எந்தவிதமான-அதாவது கூட்டமைப்பிலிருந்து எந்தவிதமான- வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு ஒரு சிலர் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தலில் எங்களுக்கு வரக் கூடிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்குச் செயற்பட முயற்சிக்கின்றார்கள். அந்த வகையில் தான் இந்தப் புதிய கூட்டு முயற்சிகளை பார்க்கின்றோம்.

எம்மைப் பொறுத்தவரை இன்றைக்கு நேர்மையான அரசியலை – கொள்கை சார்ந்த அரசியலைக் கொண்டு போகக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம், புத்திஜீவிகள் இந்த இனத்துக்குத் தலைமை தாங்கக் கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர். ஏனென்றால் எங்கள் தரப்பினர்கள் நேர்மையானவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கின்றதென்றால் தமிழ் மக்களை எவருமே தங்களின் தேவைக்காகப் பாவித்து நடுத்தெருவில் விட முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடாக இருப்பதே காரணமாக அமைகின்றது.

தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தைத் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில் -அந்தப் புதிய தலைமைத்துவம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் – முன்னணி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறக்கூடாதென்பதற்காக எங்களிடம் வரக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏதோ வொரு வகையில் உடைப் பதற்குவாக்குப் பலத்தைக் குறைப்பதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். எல்லாவற்றையும் தாண்டி தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தக் கூட்டணி நிச்சயமாக எங்களது வாக்கு வங்கியை சரிக்காது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட எங்கள் வாக்கு வங்கியைக் கடைசிநேரத்தில் சரிப்பதற்காக இந்தியாவின் ஆதரவோடு இன்னொரு கூட்டு என்ற பெயரில் சுரேஷ் பிறேமச்சந்திரனும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் கூட்டச் சேர்ந்துத் தாங்கள்தான் உண்மையான மாற்று என்று சொல்லித் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்த நேரத்தில் விக்னேஸ்வரனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்கவும் அந்தக்கூட்டுக்கு மக்கள் எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத்தான் அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தனர்.

அன்றைக்கு கூட எங்களுக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் என்னவென்றால் நாங்கள் ஒரு தனிப்போக்கு என்றும், நாங்கள் யாருடனும் கூட்டுச் சேர விருப்பமில்லை, ஒரு நாளும் மக்களால் அங்கீகரிக்கக் கூடிய தரப்பு இல்லை என்ற வகையில்தான் அனைத்துத் தரப்புக்களும் எங்களை விமர்சித்தார்கள். ஆனால் மக்கள் அப்படிப் பார்க்கவில்லை. மக்கள் மிகத் தெளிவாக எங்களுக்குத்தான் புதிய தலைமைத்துவம் என்ற விடயத்தில் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார்கள். அதில் அறுதிப் பெரும்பான்மையை ஈட்டி சபைகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறோம்.நேர்மையான கலாசாரத்தை வெளிப்படுத்தி வருகின்றோம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

வரப் போகின்ற தேர்தல் ஒரு நாடாளுமன்ற தேர்தலாக இருக்கிறது. ஒட்டுமொத்த தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற போது தமிழ் மக்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பார்கள் என்று தான் நம்பு கின்றோம். கடந்த உள்ளுராட்சித் தேர்தலையும் விட பல மடங்கு மேலாக நாங்கள் பலப்பட்டு நிச்சயமாக தனிப்பெரும் கட்சி என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.