வாக்கெடுப்புக்கள் மூலம் தமிழரசுக் கட்சி கூறுகளாக பிளவுபட்டுள்ளது – சி.வி.கே.சிவஞானம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் தெரிவுக்காக நடந்த வாக்கெடுப்புக்களின் மூலம், கட்சி சில கூறுகளாக பிளவுபட்டுள்ளமையை யாரும் மறுதலிக்க முடியாது என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு –

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கட்சியின் அமைப்பு விதி அல்லது யாப்பின் விதி 7 அ(3) இன்படி பொதுச்சபையினால் தெரிவு செய்யப்படுவார். அமைப்பு விதி 13(ஆ) பொதுச் செயலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை விபரிக்கிறது. இதன்படி, இவர் கட்சியின் பிரதம செயல் ஆற்றும் உத்தியோகத்தர் ஆவதுடன் கட்சியின் சகல கிளைகளை ஒருமுகப்படுத்தி இணைப்பதுடன் மத்திய அலுவலகத்திற்கு பொறுப்பாகவும் இருப்பார். மிகப்பிரதானமாக பொதுச் செயலாளர் எல்லா விடயங்களிலும் தலைவருக்கு உதவி செய்வதுடன் தலைவரோடு ஆலோசித்து கட்சியின் கருமங்களை நடத்துவார்.

விதி 9(அ)வின்படி கட்சியின் முதல்வர் தலைவரே. இதன்படி நிறைவேற்று அதிகாரம் தலைவருக்குரியது. விதி 13(அ)02 இன்படி பொதுச் செயலாளருக்கும் இணைப் பொருளாளருக்கும் கட்சியை நடத்தும் விடயத்தில் ஆலோசனை கூறுவதும் வழி நடத்துவதும் தலைவரின் கடமையும் அதிகாரமும் ஆகும்.

இவற்றின்படி பொதுச் செயலாளர் ஒரு நிர்வாக அதிகாரியே தவிர தனித்துவமான நிறைவேற்று அதிகாரம் கொண்டவரல்லர் என்பது தெளிவு. பொதுச் செயாலளர் ஒருவர் தாமாக பதவி விலகினாலோ, மத்திய செயற்குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது மரணித்தாலோ பதவி வறிதாக்கப்பட்டு வெற்றிடமாகும். விதி 13 (ஈ) 02 இன்படி பொதுச் செயலாளர் தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதவிடத்து துணைச் செயலாளர் அவரது கடமைகளை பதில் கடமை மூலம் நிறைவேற்றுவார். இது ஒரு நடைமுறை ஒழுங்காகும்.

எனினும் பொதுச் செயலாளர் பதவி வறிதாக்கப்பட்டு வெற்றிடமானால் அது விதி 13(உ)வின்படி மத்திய செயற் குழுவினால் நிரப்பப்படும். வெற்றிடம் பொதுச்சபையினால் தான் தெரிவுசெய்யப்படும் என்ற பரவலாக கூறப்படும் கருத்து தவறானது. மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக இருப்பதால் தேசிய பட்டியல் போன்ற விடயங்களில் தனித்து அதிகாரம் உள்ளவர் என்பதால் இப்பதவி முக்கியத்துவம் பெறுவதாக கூறுவதும் தவறு” என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தாா்.